| | | | | | | | | | | | | | | | | | |
தேசிய செய்திகள் india

"தக்லைஃப்" திரைப்படம்...! அரசு பிரமாண பத்திரம் தாக்கல்...!

by Vignesh Perumal on | 2025-06-19 01:26 PM

Share:


"தக்லைஃப்" திரைப்படம்...! அரசு பிரமாண பத்திரம் தாக்கல்...!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள "தக்லைஃப்" திரைப்படம் கர்நாடகாவில் வெளியானால், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் (Affidavit) தாக்கல் செய்து உறுதி அளித்துள்ளது.

"தக்லைஃப்" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன், "தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது" என்று பேசிய கருத்து, கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர்கள், பல்வேறு கன்னட அமைப்புகள் மற்றும் திரைப்பட வர்த்தக சபை ஆகியவை கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தின. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்ததால், "தக்லைஃப்" திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாது என்றும், திரையிடப்பட்டால் திரையரங்குகள் தாக்கப்படும் என்றும் சில கன்னட அமைப்புகள் எச்சரித்தன. இதனால், "தக்லைஃப்" திரைப்படம் கர்நாடகாவில் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியாகவில்லை.

இந்தச் சூழலில், "தக்லைஃப்" படத்தை கர்நாடகாவில் எந்தத் தடையும் இல்லாமல் திரையிடவும், பார்வையாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும் கோரி கமல்ஹாசன் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கும் வரை கர்நாடகாவில் படத்திற்கு தடை நீக்கப்படாது என்று கருத்து தெரிவித்தது. இருப்பினும், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை.

இதையடுத்து, கர்நாடகாவில் "தக்லைஃப்" படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மகேஷ் ரெட்டி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்தனர்.  "கர்நாடகாவில் 'தக்லைஃப்' திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது. திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். குண்டர்கள், கும்பல்கள் நமது வீதிகளை கைப்பற்ற அனுமதிக்க முடியாது. உரிய தணிக்கை சான்றிதழ் (CBFC certificate) பெற்ற பிறகு ஒரு திரைப்படத்தை வெளியிட அனைவருக்கும் உரிமை உண்டு. மக்கள் ஒரு திரைப்படத்தை பார்க்க வேண்டுமா வேண்டாமா என்பதை அவர்களே முடிவு செய்வார்கள். அதற்காக ஒரு படத்தை தடை செய்வது ஏற்க முடியாதது.சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும். சிலரின் அச்சுறுத்தலுக்கு அரசு அடிபணியக் கூடாது." என்று தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த உத்தரவை அடுத்து, கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அந்த பிரமாண பத்திரத்தில், "தக்லைஃப்" திரைப்படம் கர்நாடகாவில் வெளியானால், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும், திரையரங்குகள் மற்றும் பொதுமக்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது. உள்துறையின் (சட்டம் - ஒழுங்கு) துணை செயலாளர் கும்டா பிரகாஷ் இந்த பிரமாண பத்திரத்தை கர்நாடக அரசு சார்பில் தாக்கல் செய்தார்.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவும், கர்நாடக அரசின் பிரமாண பத்திரமும், "தக்லைஃப்" படம் கர்நாடகாவில் வெளியாவதற்கான சட்டரீதியான தடையை நீக்கியுள்ளன. இருப்பினும், கர்நாடக விநியோகஸ்தர்கள் தரப்பில், படம் ஏற்கனவே வெளியாகி இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டதாலும், விரைவில் ஓடிடியில் வெளிவர வாய்ப்புள்ளதாலும், இப்போதைய சூழலில் படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதால் பொருளாதார ரீதியாக பெரிய அளவில் பயன் இருக்காது என்று கருத்துகள் வெளியாகி வருகின்றன. எனினும், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு கமல்ஹாசனின் கலை சுதந்திரம் மற்றும் கொள்கை உறுதியை நிலைநிறுத்தியுள்ளதாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.





நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment