by Vignesh Perumal on | 2025-06-18 03:07 PM
திண்டுக்கல் மாவட்டம், சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள கணேசன் என்பவரின் தோட்டத்தில் உள்ள கிணற்றில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மிதந்தது. கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணி கட்டப்பட்ட நிலையில் இருந்த அந்த உடலைப் பார்த்த பொதுமக்கள், உடனடியாக தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாடிக்கொம்பு போலீசார், அந்த ஆணின் உடலை மீட்டனர். பின்னர், உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) பிரதீப் உத்தரவின் பேரில், புறநகர் DSP சிபிசாய் சௌந்தர்ய்ன் மேற்பார்வையில், தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர்கள் சூரியகலா, முனியாண்டி மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன.
விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் வேடசந்தூர், பூத்தாம்பட்டியைச் சேர்ந்த ஜோதிமணி (37) என்பது தெரியவந்தது. மேலும், இவருக்கும் வேடசந்தூரைச் சேர்ந்த முருகன் மனைவி கோமதி (33) என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது.
இந்நிலையில், கோமதிக்கு ஸ்டாலின் (27) என்பவருடன் மற்றொரு கள்ளத்தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தொடர்பு ஜோதிமணிக்கு இடையூறாக இருந்ததால், ஜோதிமணியை கொலை செய்ய கோமதி திட்டமிட்டுள்ளார்.
இதன்படி, கோமதி (33), நடராஜன் மனைவி நீலா (55), நடராஜன் (60), ஸ்டாலின் (27), ஆரோக்கியசாமி (37), குட்டி (24) ஆகியோர் சேர்ந்து, ஜோதிமணியை வேடசந்தூரில் உள்ள வீட்டிற்கு வரவழைத்துள்ளனர். அங்கு, ஜோதிமணிக்கு உளுந்தங்கஞ்சியில் 4 தூக்க மாத்திரைகளையும், வரக்காபியில் 4 தூக்க மாத்திரைகளையும் கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளனர்.
பின்னர், ஜோதிமணியின் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது கை, கால்கள் மற்றும் வாயைக் கட்டி, உடலை சென்னமநாயக்கன்பட்டி அருகே உள்ள கிணற்றில் வீசிச் சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கொடூரமான கொலை தொடர்பாக, தாடிக்கொம்பு போலீசார் கோமதி, நீலா, நடராஜன், ஸ்டாலின், ஆரோக்கியசாமி, குட்டி ஆகிய 6 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.