by Vignesh Perumal on | 2025-06-18 02:55 PM
சென்னை மற்றும் டெல்லி இடையேயான இரண்டு ஏர் இந்தியா பயணிகள் விமானங்கள், நிர்வாக காரணங்களால் இன்று (ஜூன் 18, 2025) ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை - டெல்லி மற்றும் டெல்லி - சென்னை மார்க்கங்களில் இயக்கப்படவிருந்த இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. எனினும், விமான நிலைய அதிகாரிகள் தரப்பில், பயணிகளுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, சவுதி அரேபியாவின் தமாமிலிருந்து சென்னை வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சுமார் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், அதனுடன் தொடர்புடைய சென்னை - சிங்கப்பூர் விமானமும் தாமதமாகப் புறப்பட்டது.
வழக்கமாக, தமாமிலிருந்து அதிகாலை 3.25 மணிக்கு சென்னை வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், அதிகாலை 5 மணிக்கு சென்னையிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் செல்லும். ஆனால், இன்று தமாம் விமானம் சுமார் 6 மணி நேரம் தாமதமாக, காலை 9.25 மணிக்குதான் சென்னை வந்தடைந்தது. இதன் காரணமாக, சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்லவிருந்த விமானமும் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.
இந்த திடீர் ரத்து மற்றும் தாமதங்கள் காரணமாக, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் அவதிக்குள்ளானதாகத் தெரிகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.