by Vignesh Perumal on | 2025-06-18 10:33 AM
திண்டுக்கல், பழனி பைபாஸ் சாலையில் உள்ள ராமையன்பட்டி பிரிவு அருகே, சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் உடல் அட்டைப்பெட்டிக்குள் மர்மமான முறையில் கிடந்தது இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்-பழனி பைபாஸ் சாலையில் ராமையன்பட்டி பிரிவு அருகே உள்ள ஒரு புதர் மண்டிய பகுதியில், இன்று காலை அவ்வழியே சென்ற பொதுமக்கள், பெரிய அட்டைப்பெட்டி ஒன்று கிடப்பதைக் கண்டனர். சந்தேகம் அடைந்து அருகில் சென்று பார்த்தபோது, அந்த அட்டைப்பெட்டிக்குள் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இது குறித்து தாலுகா போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும், தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் உடலை மீட்டுப் பார்வையிட்டபோது, இறந்தவர் யார், எப்படி இறந்தார் என்பது குறித்து எந்தத் தகவலும் உடனடியாகத் தெரியவில்லை. உடலில் காயங்கள் ஏதும் உள்ளதா, அல்லது இயற்கைக்கு மாறான மரணமா என்பது குறித்துப் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே தெரியவரும்.
மீட்கப்பட்ட சடலத்தை, பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவர் யார் என்பதைக் கண்டறியும் பணியிலும், அவர் எப்படி இறந்தார், அட்டைப்பெட்டியில் உடலை வைத்துச் சென்றவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராப் பதிவுகளையும், பொதுமக்கள் மற்றும் அருகிலுள்ள கடைகளில் விசாரணை நடத்தியும் துப்பு துலக்கப்பட்டு வருகிறது.
பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அட்டைப்பெட்டிக்குள் ஒரு ஆண் பிணம் கிடந்த சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பெரும் பரபரப்பையும், மர்மத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.