by Vignesh Perumal on | 2025-06-18 08:06 AM
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வாங்கலாபுரத்தில், பட்டப்பகலிலேயே ஒரு வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் தங்கக் காசுகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாங்கலாபுரத்தைச் சேர்ந்த இளங்கோபாண்டியன் (37) என்பவர், தனது மனைவி மாசிலாமணியுடன் வசித்து வருகிறார். இன்று காலை இளங்கோபாண்டியன் வேலைக்குச் சென்ற நிலையில், அவரது மனைவி மாசிலாமணி ரேஷன் கடைக்கு உணவுப் பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். இதனால் வீடு பூட்டப்பட்டிருந்தது.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் ஒருவர், வீட்டின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார். பின்னர், வீட்டின் உள்ளே இருந்த பீரோவையும் உடைத்து, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 4 பவுன் எடையுள்ள தங்கக் காசுகளையும், ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
ரேஷன் கடைக்குச் சென்று திரும்பிய மாசிலாமணி, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு பணம் மற்றும் தங்கக் காசுகள் கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாக கூம்பூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டை ஆய்வு செய்தனர். பின்னர், அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்தக் கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.