by Vignesh Perumal on | 2025-06-17 10:48 AM
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே ஏடிஎம்-க்கு பணம் நிரப்பச் சென்ற ஊழியரிடம் இருந்து ரூ.29 லட்சம் பணம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், சிறுவன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சின்னாளபட்டியில் உள்ள ஒரு தனியார் ஏடிஎம் மையத்திற்குப் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வந்த நாகார்ஜுன் (30) என்பவர், இன்று காலை இருசக்கர வாகனத்தில் ரூ.29 லட்சம் பணத்தைக் கொண்டு சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல்லில் இருந்து சின்னாளபட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த அவர், செம்பட்டி அருகே உள்ள புதுகோடாங்கிபட்டி டாஸ்மாக் கடை அருகில் வந்தபோது, மூன்று பேர் கொண்ட கும்பல் அவரது இருசக்கர வாகனத்தை வழிமறித்தது.
அந்தக் கும்பல், நாகார்ஜுனை கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த ரூ.29 லட்சம் பணத்தைப் பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது. இச்சம்பவம் குறித்து நாகார்ஜுன் செம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) பிரதீப் உத்தரவின் பேரில், ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வு செய்தனர். கொள்ளை கும்பல் தப்பிச் செல்லப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணைக் கண்டறிந்தனர். அந்தப் பதிவு எண் தேவதானப்பட்டியைச் சேர்ந்தது என்ற தகவலின் அடிப்படையில், போலீசார் தங்கள் விசாரணையை முடுக்கிவிட்டனர்.
தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, தேவதானப்பட்டியைச் சேர்ந்த சுரேந்தர் (25), முகமது இத்ரீஸ் (21), பிரீத்திவ் (19) மற்றும் 17 வயது சிறுவன் என மொத்தம் நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொள்ளைச் சம்பவத்தில் இவர்களுக்கு இருந்த தொடர்பு உறுதி செய்யப்பட்டது. மேலும், இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கொள்ளை வழக்கில் மேலும் சிலரிடம் விசாரணை நடத்தப்பட வாய்ப்புள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.