by Vignesh Perumal on | 2025-06-16 10:09 AM
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான சமீபத்திய மோதல் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும் என்ற அபாயம் எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையை சமாளிக்கும் பொருட்டு, இந்தியா கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் இருந்து கூடுதலாக இறக்குமதி செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச பங்குச் சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்தன. கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் பத்து சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தது. ப்ரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் $74.23 ஆகவும், WTI கச்சா எண்ணெய் $77.62 ஆகவும் உயர்ந்துள்ளது. இது ஜனவரி மாதத்திற்குப் பிறகு இல்லாத உச்சமாகும். மத்திய கிழக்கில் போர் மூளும் அபாயம் உள்ளதால் முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கம் நிலவுகிறது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 12 சதவீதத்தை மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்கிறது. மீதமுள்ள 88 சதவீதம் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இதில், அதிகபட்சமாக ரஷ்யாவிடம் இருந்து 38 சதவீதம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. மீதமுள்ள தேவை பெரும்பாலும் வளைகுடா நாடுகளில் இருந்தே பூர்த்தி செய்யப்படுகிறது. தற்போதைய இஸ்ரேல் - ஈரான் மோதல் காரணமாக, இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 60 சதவீதத்திற்கும் மேல் பாதிக்கப்படக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதன் விளைவாக, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை உயர வாய்ப்புள்ளது.
இந்த சவாலை எதிர்கொள்ள மத்திய அரசு தற்போதே திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை கூடுதலாக இறக்குமதி செய்ய இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது. 2024 ஆம் ஆண்டில் மட்டும், ரஷ்யாவிடம் இருந்து சுமார் 4.47 லட்சம் கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த மே மாதத்தில் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு நாள் ஒன்றுக்கு 18 லட்சம் பேரல்களாக உயர்ந்துள்ளது.
இந்தியா ஏற்கனவே தனது இருப்புத் திறனை அதிகரித்து, எரிபொருள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இருப்பினும், சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் நிலையற்றத்தன்மை, நாட்டின் பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கிய காரணியாக உள்ளது. மத்திய கிழக்கு பதட்டங்கள் தணிந்து, கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஸ்திரத்தன்மையை அடைந்தால் மட்டுமே, இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வு அபாயம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.