by Vignesh Perumal on | 2025-06-16 09:42 AM
தேனி மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின்கீழ் 9,164 பேர் அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு எழுதினர். இது முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக மாற்றும் முயற்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் "புதிய பாரத எழுத்தறிவு திட்டம்" 557 மையங்கள் மூலம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் 15 வயதிற்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பயிற்சி கடந்த ஜனவரி 2025 முதல் வழங்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் கலந்துகொண்ட கற்போருக்கான அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நேற்று தேனி மாவட்டம் முழுவதும் நடைபெற்றது.
இந்த ஆண்டு வழக்கமான பயிற்சி மையங்களுடன் கூடுதலாக, மாவட்டத்தில் உள்ள 5 ஆதரவற்ற முதியோர் இல்லங்களில் வசிக்கும் 140 முதியோருக்கும் சிறப்பு எழுத்தறிவுப் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியின் முடிவில் நடைபெற்ற இந்த அடிப்படை எழுத்தறிவுத் தேர்வை மொத்தம் 9,164 கற்போர் எழுதினர்.
தேர்வு எழுதிய கற்போர்களுக்கு விரைவில் மதிப்பீட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்கள் ஆகியோர் இணைந்து சிறப்பாகச் செய்திருந்தனர்.
தேர்வு மையங்களை, தேனி மாவட்ட உதவி திட்ட அலுவலர் மோகன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தெய்வேந்திரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இக்கல்வியாண்டின் இறுதியில் நடைபெறும் தேர்விற்குப் பிறகு, தேனி மாவட்டத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக மாற்றுவதற்கான தீவிர முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அரசின் இந்த முன்னெடுப்பு, தேனி மாவட்டத்தின் எழுத்தறிவு விகிதத்தை உயர்த்தி, சமூக மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.