by Vignesh Perumal on | 2025-06-15 02:51 PM
தமிழகத்தில் இன்று (ஜூன் 15, 2025) நீலகிரி மாவட்டத்திற்கு அதிக கனமழைக்கான "ரெட் அலர்ட்" எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோவையில் மிதமான மழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் (ஜூன் 15 மற்றும் 16) அதிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 பேர் கொண்ட பேரிடர் மீட்புக் குழுவினர் உதகைக்கு வந்துள்ளனர். பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியில் வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த மே மாத இறுதியில் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்தும், மண் சரிவு ஏற்பட்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கோவை, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வடக்கு கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் தரைக்காற்று மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.