by Vignesh Perumal on | 2025-06-15 02:40 PM
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 1 மற்றும் 1ஏ பணிகள்) முதல்நிலை போட்டித் தேர்வை திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 4,836 நபர்கள் எழுதினர். இத்தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்டபோது தெரிவித்தார்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (தொகுதி 1 மற்றும் 1ஏ பணிகள்) முதல்நிலை போட்டித் தேர்வு இன்று (ஜூன் 15, 2025) நடைபெறுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 6,448 நபர்கள் தேர்வு எழுதுவதற்காக 15 இடங்களில் 25 அறைகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களில் 4,836 நபர்கள் தேர்வு எழுதினர். 1,612 நபர்கள் தேர்வு எழுதவில்லை.
இத்தேர்வினைக் கண்காணிக்க மொத்தம் 7 நடமாடும் குழுக்கள், 2 பறக்கும் படை, மற்றும் 26 வீடியோ ஒளிப்பதிவாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தேர்வு மையங்களில் தேர்வர்கள் எவ்வித சிரமமும் இன்றி தேர்வு எழுதுவதற்குத் தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
செய்தி- மோகன் கணேசன் திண்டுக்கல்.