by Vignesh Perumal on | 2025-06-15 02:25 PM
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 1 முதல்நிலைத் தேர்வு 2025, இன்று (ஜூன் 15, 2025) தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. மொத்தம் 2,38,247 தேர்வர்கள் இந்தத் தேர்வை எழுதியதாக TNPSC தெரிவித்துள்ளது.
இந்தத் தேர்வு துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர் (வணிக வரிகள்), கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட அலுவலர் (தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்) உள்ளிட்ட 90 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்டது. தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில், 2 லட்சத்து 38 ஆயிரத்து 247 பேர் இன்று தேர்வில் பங்கேற்றனர். இவர்களில் 1,25,726 ஆண்கள், 1,12,501 பெண்கள் மற்றும் 20 மூன்றாம் பாலினத்தவர் அடங்குவர். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் மொத்தம் 797 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் மட்டும் 124 மையங்களில் 38,891 தேர்வர்கள் தேர்வு எழுதினர்.
காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை தேர்வு நடைபெற்றது. முதல்நிலைத் தேர்வு மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு 200 வினாக்களைக் கொண்டிருந்தது. இதில், 175 கேள்விகள் பொது அறிவுப் பகுதியிலிருந்தும், மீதமுள்ள 25 கேள்விகள் கணிதம் மற்றும் மனத்திறன் பகுதியிலிருந்தும் கேட்கப்பட்டிருந்தன.
முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள், ஒரு காலியிடத்திற்கு 20 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் முதன்மைத் தேர்வுக்கு (Main Examination) அனுமதிக்கப்படுவார்கள். முதன்மைத் தேர்வு விரிவாக விடையளிக்கும் வகையில் பொது அறிவு தொடர்பான மூன்று தாள்கள் மற்றும் ஒரு கட்டாய தமிழ்மொழித் தகுதித் தாள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
இந்தத் தேர்வு, தமிழக அரசுப் பணிகளில் சேர விரும்பும் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவை நனவாக்கும் ஒரு முக்கியப் படியாகப் பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.