by Vignesh Perumal on | 2025-06-15 12:14 PM
மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள இரு போக பாசனப் பகுதியின் முதல் போக விவசாயப் பரப்புக்குத் தேவையான தண்ணீரை, தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. ஐ.பெரியசாமி மற்றும் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. பி.மூர்த்தி ஆகியோர் இன்று (ஜூன் 15, 2025) திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்வில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ.சரவணன் இ.ஆ.ப., மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மா.சௌ.சங்கீதா இ.ஆ.ப., மற்றும் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரஞ்ஜீத் சிங் இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தண்ணீர் திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. ஐ.பெரியசாமி அவர்கள், "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து பெரியாறு பாசனப்பகுதியில் இரு போக பாசனப் பகுதியில் முதல் போக பாசனத்திற்கு இன்று (15.06.2025) தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் முதல்போக பாசன பரப்பான 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்" என்று தெரிவித்தார்.
மேலும், அவர் கூறியதாவது: "அணையிலிருந்து தண்ணீர் விநாடிக்கு 900 கன அடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், பின்னர் 75 நாட்களுக்கு முறை வைத்தும் என இன்று முதல் மொத்தம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் உள்ள 6,739 மில்லியன் கன அடி நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து இந்தத் தண்ணீர் திறக்கப்படும்."
இந்த தண்ணீர் திறப்பின் மூலம் பாசன வசதி பெறும் பகுதிகள் குறித்த விவரங்களையும் அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டார்: நிலக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட 1,797 ஏக்கர் நிலங்கள். வாடிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட 16,452 ஏக்கர் நிலங்கள் மற்றும் மதுரை வடக்கு வட்டத்திற்குட்பட்ட 26,792 ஏக்கர் நிலங்கள். மொத்தமாக 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
"எனவே, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களைச் சார்ந்த விவசாயப் பெருங்குடி மக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற்று பயன்பெற வேண்டும்," என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. ஐ.பெரியசாமி வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிகழ்வில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தங்கதமிழ்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்களான திரு. என். இராமகிருஷ்ணன் (கம்பம்), திரு. கே.எஸ். சரவணக்குமார் (பெரியகுளம்), திரு. ஆ. மகாராஜன் (ஆண்டிபட்டி), திரு. ஆ. வெங்கடேசன் (சோழவந்தான்), உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு. ச. வினோதினி பார்த்திபன் இ.ஆ.ப., செயற்பொறியாளர்கள் திரு. ந. பாரதிதாசன் (பெரியாறு வைகை வடிநிலக் கோட்டம்), திரு. சிவபிரபாகர் (பெரியாறு பிரதான கால்வாய்) மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்தத் தண்ணீர் திறப்பு, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளின் சாகுபடிப் பணிகளுக்குப் பெரும் ஊக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.