| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் Naam Tamilar Katchi

சீமானுக்கு பனைமரம் ரெடி...! நாதக ஆர்ப்பாட்டம்..!

by Vignesh Perumal on | 2025-06-15 11:53 AM

Share:


சீமானுக்கு பனைமரம் ரெடி...! நாதக ஆர்ப்பாட்டம்..!

கள் இறக்க அரசு அனுமதி வழங்கக் கோரி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஜூன் 15, 2025) தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை பகுதியில் பனைமரம் ஏறும் நூதனப் போராட்டத்தை நடத்தவுள்ளார். இதற்காக பனைமரம் ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கள் இறக்கி விற்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால், பனைத் தொழிலை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருவதாக நாம் தமிழர் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கள் இறக்குவது தமிழர் பண்பாட்டின் அங்கம் என்றும், அது ஒரு போதைப் பொருள் அல்ல, மாறாக ஊட்டச்சத்து மிக்க பானம் என்றும் சீமான் பல ஆண்டுகளாகப் பேசி வருகிறார்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பல போராட்டங்களை நாம் தமிழர் கட்சி நடத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இன்று பெரியதாழை கிராமத்தில் சீமான் நேரடியாக பனைமரம் ஏறி, கள் இறக்கும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார். பனைமரம் ஏறும் கலையில் தனக்கு பயிற்சி இல்லை என்றாலும், தமிழர்களின் பாரம்பரியமான இந்தத் தொழிலை மீட்டெடுப்பதற்காகத் தான் இந்தச் செயலில் ஈடுபடுவதாக சீமான் தெரிவித்துள்ளார். மேலும், "எந்த வேலையும் செய்வது இழிவு அல்ல; எந்த வேலையும் செய்யாமல் இருப்பதுதான் இழிவு. பனை ஏறுதல் என்பது நம்முடைய பரம்பரை பண்பாடு, நம்முடைய தொன்று தொட்ட வேளாண்மையின் வடிவம்" என்று அவர் கூறியுள்ளார்.

இந்த போராட்டத்திற்கு தமிழக பனையேறிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் ஆகியவை இணைந்து ஆதரவு அளித்துள்ளன. நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள், அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்கள் எனப் பெருந்திரளானோர் போராட்டத்தில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இருப்பினும், திருச்செந்தூர் போலீசார் இந்தப் போராட்டத்திற்கு முதலில் வழங்கப்பட்ட அனுமதியை மறுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அனுமதி மறுக்கப்பட்டதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். "போராட்டம் நடத்தக்கூடாதென்றால் மாற்று இடத்தை முன்பே வழங்கி இருக்கலாமே? அதனை விடுத்து போராட்டம் நடத்தவே அனுமதி மறுப்பது ஏன்? யாருக்குப் பயந்து, யாருடைய உத்தரவின் பேரில் காவல்துறை முதலில் வழங்கிய அனுமதியை தற்போது மறுக்கிறது?" என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அனுமதி மறுக்கப்பட்டாலும், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. இதனால் பெரியதாழை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.


நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment