by Vignesh Perumal on | 2025-06-14 04:51 PM
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மேல்மலை மற்றும் கீழ்மலைப் பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, மாதம்தோறும் மருத்துவ முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இன்று (ஜூன் 14, 2025) இந்த முகாமின் துவக்க விழா நடைபெற்ற நிலையில், சமூக ஆர்வலர் தாண்டிக்குடி கணேஷ்பாபு, மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், தங்களின் மருத்துவத் தேவைகள் மற்றும் அரசு அடையாள அட்டைகளைப் பெற திண்டுக்கல்லுக்கு 3 பேருந்துகளில் மாறி மாறி சிரமப்பட்டுச் செல்ல வேண்டியிருந்தது. இந்த சிரமத்தைக் கருத்தில் கொண்டு, சமூக ஆர்வலர் தாண்டிக்குடி கணேஷ்பாபு கடந்த மாதம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்திருந்தார்.
அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், இனிமேல் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வியாழக்கிழமை காலை 10:00 மணியளவில் கொடைக்கானலில் உள்ள அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெறும் என்று உத்தரவிட்டார்.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி, இந்த சிறப்பு மருத்துவ முகாமின் துவக்க விழா இன்று (ஜூன் 14, 2025) காலை 10:00 மணியளவில் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த முகாமில் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
முகாமில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான அரசின் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, பஸ் பாஸ் மற்றும் ரயில் பாஸ் போன்ற ஆவணங்கள், அங்கிருந்த மருத்துவர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு உடனுக்குடன் வழங்கப்பட்டன. இது மாற்றுத்திறனாளிகளுக்கு பெரும் பயனுள்ளதாக அமைந்தது.
இந்த ஏற்பாட்டிற்கு உதவிய அனைவருக்கும் சமூக ஆர்வலர் தாண்டிக்குடி கணேஷ்பாபு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், "நமது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. இந்த மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் வெற்றிகரமாக நடைபெற உதவிய கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திரு. திருநாவுக்கரசு அவர்களுக்கும், வட்டாட்சியர் திரு. பாபு அவர்களுக்கும், திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு. தங்கவேல் அவர்களுக்கும், அந்த அலுவலகத்தின் அனைத்து ஊழியர்களுக்கும், கொடைக்கானல் அரசு மருத்துவமனை மருத்துவர் திருமதி. பொள்ரதி மற்றும் அனைத்து மருத்துவக் குழுவினர்களுக்கும், ஊழியர்களுக்கும், தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒட்டன்சத்திரம் ராஜ கணபதி அவர்களுக்கும், இந்த மருத்துவ முகாமிற்கு வருகை தந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்த அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இன்று கொடைக்கானலில் நடந்த மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு உடனுக்குடன் அடையாள அட்டை, பஸ் பாஸ் மற்றும் ரயில் பாஸ் போன்றவற்றை அதிகாரிகள் வழங்கிய புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.