by Vignesh Perumal on | 2025-06-13 08:10 PM
ஆடி மாதத்தை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு 2,000 பக்தர்களை இலவச ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்தச் சிறப்புத் திட்டம் குறித்து அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இலவச ஆன்மீகச் சுற்றுலாவில் கலந்துகொள்ள, இந்து மதத்தைச் சேர்ந்த 60 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும், விண்ணப்பதாரர்களின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தகுதியுடைய பக்தர்கள் வரும் ஜூலை 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த இலவச ஆன்மீக சுற்றுலா குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை அறிந்துகொள்ள, இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.hrce.tn.gov.in என்ற முகவரியைப் பார்வையிடலாம். அல்லது, கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1757 ஐத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம்.
ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு உகந்த மாதமாகப் போற்றப்படுகிறது. இந்தச் சமயத்தில், மூத்த குடிமக்கள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு, புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்ய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதே இந்த இலவச ஆன்மீகச் சுற்றுலாவின் முக்கிய நோக்கம் என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இந்த முயற்சி பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.