இலங்கையில் பதற்றம்...! அவசர நிலை பிரகடனம்...! தத்தளிக்கும் மக்கள்...!
by Vignesh Perumal on |
2025-11-29 04:42 PM
Share:
Link copied to clipboard!
'டிட்வா' புயல் இலங்கையை மிகக் கடுமையாகத் தாக்கியுள்ள நிலையில், புயலால் ஏற்பட்டுள்ள பெரும் சேதங்கள் மற்றும் உயிரிழப்புகளின் காரணமாக, அதிபர் அனுரகுமார திசாநாயக்க அவர்கள் நாடு முழுவதும் பேரிடர் அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளார்.
'டிட்வா' புயலின் ஆக்ரோஷமான தாக்குதலால் இலங்கையின் பல்வேறு மாகாணங்கள் வரலாறு காணாத சேதத்தைச் சந்தித்துள்ளன.
பல மாகாணங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த புயலால் இதுவரை 130 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், நூற்றுக்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்றும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் கொழும்புவில் முக்கியச் சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளதால், நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.
பேரழிவுக்குள்ளான பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும், அரசு இயந்திரங்களை முழுவீச்சில் பயன்படுத்தவும் வழிவகுக்கும் வகையில் அதிபர் அனுரகுமார திசாநாயக்க இந்த அவசர நிலை பிரகடனத்தை வெளியிட்டுள்ளார்.
அவசர நிலை பிரகடனத்தைத் தொடர்ந்து, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான உதவிகளை விரைவாக வழங்குதல், தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்துச் சீர்கேடுகளைச் சரிசெய்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளன.
இந்த நிலையில், கொழும்பு விமான நிலையத்தில் சிக்கித் தவித்த இந்தியர்களுக்காக ஏற்கனவே இந்தியத் தூதரகம் அவசர உதவி மையத்தை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.