by Vignesh Perumal on | 2025-11-11 11:30 AM
திருச்சியில் இருந்து அரியலூர் நோக்கி வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்களை ஏற்றி வந்த கனரக லாரி ஒன்று, இன்று (நவம்பர் 11, 2025) காலை வாரணவாசி அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி தீப்பிடித்து எரிந்து, அதில் இருந்த சிலிண்டர்கள் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
திருச்சியில் இருந்து அதிகாலை புறப்பட்ட சிலிண்டர் லாரியை கனகராஜ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். வாரணவாசி கிராமம் அருகே உள்ள வளைவுப் பகுதியில் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. லாரி கவிழ்ந்ததில் சிலிண்டர்கள் சிதறி, உடனடியாக லாரியின் கேபினில் தீப் பிடிக்கத் தொடங்கியது.
தீ விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே, லாரியில் இருந்த சிலிண்டர்கள் அதிக வெப்பம் காரணமாக ஒன்றன் பின் ஒன்றாக வெடிகுண்டு வெடிப்பது போல பயங்கர சத்தத்துடன் சீரான இடைவெளியில் வெடித்துச் சிதறின. இந்தத் தொடர் வெடிப்புகளால் சுமார் அரை கிலோமீட்டர் சுற்றளவில் புகை மண்டலம் சூழ்ந்ததுடன், சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் பீதியடைந்து ஓட்டம் பிடித்தனர்.
இதன் காரணமாக, அரியலூர்-திருச்சி, தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. அவ்வழியாகச் செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.
விபத்தில் லாரியின் ஓட்டுநரான கனகராஜ் காயமடைந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் மீட்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டு, தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மூன்று 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி லாரியில் பரவிய தீயை முழுவதுமாக அணைத்தனர்.
சம்பவ இடத்தில் உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கான சரியான காரணம் குறித்தும், லாரி சேத மதிப்பு குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நல்ல வேளையாக விபத்து நடந்த பகுதியில் வீடுகள் இல்லாததால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
SC/ST மக்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து பத்திரிக்கையாளர் கார்த்திக் சங்கர் விளக்கம்....!!!!"
பறவை காய்ச்சல் எதிரொலி - காகங்கள் இறப்பு -அரசு எச்சரிக்கை - பொதுமக்களே உஷார் !
கொரியன் லவ் கேம் - 3 சகோதரிகள் தற்கொலை - அதிர்ச்சி தகவல் - பெற்றோர்களே உஷார் !!
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு