by Vignesh Perumal on | 2025-11-10 02:51 PM
திருச்சி மாநகரின் மையப்பகுதியான பீமநகரில் உள்ள காவலர் குடியிருப்புக்குள் புகுந்து, இளைஞர் ஒருவரை மர்மக் கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு நிலை குறித்துக் கேள்வியெழுப்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பீமநகர் கீழத்தெருவைச் சேர்ந்த தாமரைச்செல்வன் (24). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இன்று (நவம்பர் 10, 2025) காலை, தாமரைச்செல்வன் தனது வீட்டில் இருந்து மார்சிங்பேடை பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் கொண்ட மர்மக் கும்பல் ஒன்று, தாமரைச்செல்வனின் வாகனத்தை திடீரென வழிமறித்து மோதியது. இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார்.
கீழே விழுந்த தாமரைச்செல்வனை அந்தக் கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டத் தொடங்கியது.
தாமரைச்செல்வன் அந்தக் கும்பலிடம் இருந்து தப்பிக்க அருகில் இருந்த காவலர் குடியிருப்புக்குள் ஓடி அடைக்கலம் தேடினார். இரவு பணியை முடித்துவிட்டு, தனது பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்த போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் என்பவரின் வீட்டுக்குள் தாமரைச்செல்வன் புகுந்தார்.
ஆனாலும், ஆத்திரம் தணியாத அந்தக் கும்பல், காவலரின் வீட்டிற்குள் துரத்திச் சென்று, கண் இமைக்கும் நேரத்தில் சமையல் அறையில் நுழைந்து தாமரைச்செல்வனைச் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது.
காவலர் குடியிருப்பில், காவலரின் வீட்டிற்குள்ளேயே இந்த கொடூரக் கொலை நடந்திருப்பது காவல்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலைச் சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும், திருச்சி மாநகர வடக்கு துணை ஆணையர் சிபின் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும், தடயங்களைச் சேகரிக்க மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், கொலைக்கான காரணம் முன்விரோதமாக இருக்கலாம் எனப் புலன் விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இந்தக் கொலை தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சம்பவத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 5 பேரைக் கைது செய்துள்ளனர். காலையில் ஒருவர் பிடிபட்ட நிலையில், பின்னர் சதீஸ், பிரபாகரன், நந்து, கணேசன் ஆகிய மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலையின் பின்னணி மற்றும் அவர்களுக்கு இடையே இருந்த பகை குறித்துக் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
காவலர் குடியிருப்பிற்குள்ளேயே படுகொலை நடந்த சம்பவம், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் மத்தியில் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. மாநிலத்தில் பொதுமக்களுக்குப் பாதுகாப்பில்லை என்றும், குற்றவாளிகள் காவல்துறைக்கு அஞ்சாமல் செயல்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர்.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்...!!! கலெக்டர் ரஞ்சித் சிங் நலத்திட்ட உதவிகள் வழங்கல்...!!!
கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது...!!!
திமுக நகராட்சி தலைவரின் குடோனில் அமலாக்கத்துறை சோதனை....!!!
தீப்பிடித்த காரில் உயிருடன் எரிந்து...! ஆய்வாளர் சலீமத் உயிரிழப்பு..! பெரும் பரபரப்பு...!
விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியனுக்கு...! 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை...! நீதிமன்றம் உத்தரவு..!