by Vignesh Perumal on | 2025-11-10 01:42 PM
கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) மேற்கொண்டு வரும் விசாரணையில், மத்திய அரசு நிறுவனத்தின் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது, அப்பகுதியில் மின்சாரம் திடீரெனத் துண்டிக்கப்பட்டது ஒரு முக்கிய சர்ச்சையாக உருவெடுத்தது. இருளில் ஏற்பட்ட குழப்பமும், வெளிச்சமின்மையும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதில் மேலும் சிரமத்தை ஏற்படுத்தி, உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சில தரப்பினர் குற்றம் சாட்டினர்.
இந்த மின்சாரம் துண்டிக்கப்பட்டதில் வெளிநபர்களின் தலையீடு இருந்ததா அல்லது அரசு அதிகாரிகளின் கவனக்குறைவு ஏதேனும் இருந்ததா என்பது குறித்தும் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த மின்சாரம் துண்டிப்பு சர்ச்சை தொடர்பாக, மத்திய அரசுக்குச் சொந்தமான மின்சார விநியோக நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷனைச் சேர்ந்த 2 அதிகாரிகள் கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.
சிபிஐ அதிகாரிகள் அவர்களுக்குச் சம்மன் அனுப்பியதையடுத்து, இந்த அதிகாரிகள் கரூரில் உள்ள சிபிஐ சிறப்பு விசாரணை முகாமில் ஆஜராகி, விசாரணை அதிகாரிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.
அன்றைய தினம் மின் விநியோகம், மின்சாரம் துண்டிக்கப்பட்டதற்கான காரணம், பராமரிப்புப் பணிகள் மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் குழு கடந்த அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி முதல் கரூரில் முகாமிட்டு விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட காவல்துறையினரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
சம்பவம் நடந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள், ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களிடமும் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
தவெக கட்சி நிர்வாகிகளையும், தலைமை அலுவலக ஊழியர்களையும் அழைத்துச் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்றுள்ளனர்.
இந்த விசாரணைகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூன்று பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவின் மேற்பார்வையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
SC/ST மக்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து பத்திரிக்கையாளர் கார்த்திக் சங்கர் விளக்கம்....!!!!"
பறவை காய்ச்சல் எதிரொலி - காகங்கள் இறப்பு -அரசு எச்சரிக்கை - பொதுமக்களே உஷார் !
கொரியன் லவ் கேம் - 3 சகோதரிகள் தற்கொலை - அதிர்ச்சி தகவல் - பெற்றோர்களே உஷார் !!
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? கார்த்திக்சங்கர் கேள்வி...???
குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...!!! தென் மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு