by Vignesh Perumal on | 2025-07-29 11:02 AM
பீகார் மாநிலத்தில் நாய்க்கு இருப்பிடச் சான்றிதழ் (Residence Certificate) வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், "மக்களின் வாக்குகள் நாய்களுக்கு வழங்கப்படும் போலிருக்கிறது" என்று காங்கிரஸ் கட்சி கருத்துத் தெரிவித்துள்ளது.
பீகாரில் உள்ள ஒரு உள்ளாட்சி அமைப்பு, ஒரு நாய்க்கு அதிகாரப்பூர்வ இருப்பிடச் சான்றிதழை வழங்கியுள்ளது. இந்தச் சான்றிதழின் வலதுபுற ஓரத்தில் நாய் ஒன்றின் புகைப்படமும் தெளிவாக அச்சிடப்பட்டுள்ளது. அரசு ஆவணத்தில் நாயின் புகைப்படம் மற்றும் தகவல்களுடன் இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது, அரசின் நிர்வாகச் செயல்பாடு குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்தச் சான்றிதழ், சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் வைரலானதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்தச் சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி, "இது அரசின் அலட்சியத்தையும், நிர்வாகத் திறமையின்மையையும் காட்டுகிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறிய அரசு, நாய்களுக்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்குகிறது. எதிர்காலத்தில், மக்களின் வாக்குகள் நாய்களுக்கு வழங்கப்படும் போலிருக்கிறது" என்று எள்ளி நகையாடியுள்ளது.
இந்த விவகாரம், பீகார் அரசின் நிர்வாகப் பிழைகளைக் குறிப்பதாகவும், அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதுபோன்று போலியான அல்லது தவறான ஆவணங்கள் வழங்கப்படுவது, அரசின் வெளிப்படைத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து பீகார் அரசு உடனடியாக விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது..
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்