by Vignesh Perumal on | 2025-07-27 03:02 PM
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி SRM பல்கலைக்கழகம் அருகே உள்ள தனியார் விடுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், சுமார் 5,250 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தச் சம்பவம் மாணவர் வட்டாரத்திலும், காவல்துறை மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், குறிப்பாகக் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள விடுதிகளில் போதைப் பொருள் விற்பனை நடப்பதாகக் காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து, செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
ரகசியத் தகவலின் அடிப்படையில், இன்று கூடுவாஞ்சேரி SRM பல்கலைக்கழகம் அருகேயுள்ள சில தனியார் விடுதிகளில் போலீசார் அதிரடிச் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த 5,250 கஞ்சா சாக்லேட்டுகளைக் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா சாக்லேட்டுகள், மாணவர்கள் மத்தியில் புழக்கத்தில் இருந்துள்ளதா, யார் யார் இவர்களுக்கு உடந்தையாக இருந்துள்ளனர், இந்தச் சாக்லேட்டுகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட விடுதி நிர்வாகிகளிடமும், சந்தேகத்திற்குரிய நபர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் இதுபோன்ற போதைப் பொருள் கும்பல்களைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.