by Vignesh Perumal on | 2025-07-27 12:17 PM
இராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் அண்ணா பல்கலைக்கழகம் அருகே இன்று அதிகாலை சாலையைக் கடக்க முயன்ற புள்ளிமான் ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. வனத்துறையினர் வர கால தாமதமானதால், இறந்த மானைப் பாதுகாக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இன்று அதிகாலை இராமநாதபுரம் - கிழக்கு கடற்கரைச் சாலையில், தேவிபட்டினம் அண்ணா பல்கலைக்கழகம் அருகே புள்ளிமான் ஒன்று சாலையைக் கடக்க முயற்சித்துள்ளது. அப்போது, அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மான் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த புள்ளிமான், குடல் சரிந்த நிலையில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தது.
அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர், விபத்தில் உயிரிழந்த புள்ளிமானைப் பார்த்துள்ளார். உடனடியாகச் சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆனால், தகவல் தெரிவித்து நீண்ட நேரமாகியும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், உயிரிழந்த மானை வேறு வனவிலங்குகள் தூக்கிச் சென்றுவிடாமல் இருக்கவும், மாமிசத்திற்காக யாரேனும் மனிதர்கள் தூக்கிச் சென்றுவிடாமல் இருக்கவும், அக்காவலரும் மற்ற காவலர்களும் சம்பவ இடத்திலேயே தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக அடிக்கடி வனவிலங்குகள் சாலையைக் கடப்பது வழக்கம். எனவே, வாகன ஓட்டிகள் வேகத்தைக் கட்டுப்படுத்திக் கவனமாகச் செல்லுமாறும், வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் ஒத்துழைப்பு நல்குமாறும் வனத்துறை மற்றும் காவல்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.