by Vignesh Perumal on | 2025-07-24 02:01 PM
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட தலைசுற்றல் பிரச்சினை, இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே ஏற்பட்டது என, அவர் சிகிச்சை பெற்று வரும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. சிகிச்சைக்குப் பின் முதலமைச்சர் நலமாக இருப்பதாகவும், இரண்டு நாட்களில் தனது வழக்கமான பணிகளை மேற்கொள்வார் எனவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டு, பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பரிசோதனைகளின் முடிவில், இதயத்துடிப்பில் ஏற்பட்ட சில வேறுபாடுகள் காரணமாகவே அவருக்குத் தலைசுற்றல் ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டது.
இதய சிகிச்சை மருத்துவர் டாக்டர். ஜி. செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி, இதயத்துடிப்பு வேறுபாடுகளைச் சரி செய்வதற்கான சிகிச்சை முறை அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை மேற்கொள்ளப்பட்டது.
இன்று மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையும் இயல்பாக இருந்ததாக மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கிறது.
மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தற்போது நலமாக உள்ளதாகவும், தனது வழக்கமான பணிகளை அடுத்த இரண்டு நாட்களில் மேற்கொள்வார் என்றும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
முதலமைச்சரின் உடல்நலம் குறித்த இந்த அறிவிப்பு, அவரது உடல்நிலை குறித்து கவலையில் இருந்த திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.