by Vignesh Perumal on | 2025-07-09 12:05 PM
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த உடையராஜபாளையம் பகுதியில், அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், குடும்பத்தகராறு காரணமாக ஆத்திரமடைந்த கணவர், தன் மனைவியைக் கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் கணவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடையராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுமதி என்பவருக்கும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இன்று (ஜூலை 9) உடையராஜபாளையம் பகுதியில் அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனால், வீட்டில் இருந்த மற்ற அனைவரும் கோவிலுக்குச் சென்றிருந்தனர். அப்போது, வீட்டிலிருந்த சுமதிக்கும், அவரது கணவர் சத்யராஜுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற சத்யராஜ், அருகில் இருந்த கத்தியை எடுத்து மனைவி சுமதியின் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாகத் தாக்கினார்.
கத்திக்குத்தில் நிலை குலைந்த சுமதி, ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு மாதனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே சுமதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுமதியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மனைவியைக் கொன்ற சத்யராஜைக் கைது செய்த காவல்துறையினர், இந்தச் சம்பவத்திற்கான முழுமையான காரணம் மற்றும் சத்யராஜின் மனநிலை குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவிழா நாளில் நடந்த இந்தக் கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.
பெரும்பான்மை இல்லை - ஆட்சி அமைப்பதில் சிக்கல் ! என்ன செய்யப் போகிறார்? விஜய் !!
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!