by Vignesh Perumal on | 2025-05-04 08:52 PM
தேனி மாவட்டம் போடி தாலுகா குரங்கணி வனப்பகுதியில் நேற்று நள்ளிரவு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சருகுமனை வேட்டையாடியதாக கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ராணுவ வீரர் பாக்யராஜ் வனத்துறை ஊழியரை தாக்கிவிட்டு துப்பாக்கியுடன் தலைமறைவாகியுள்ளார்.
போடி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குரங்கணி வனப்பகுதியில் காட்டு மாடுகள், மான்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில், குரங்கணியைச் சேர்ந்த ராணுவ வீரர் பாக்யராஜ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் ஆகியோர் நேற்று நள்ளிரவு வனப்பகுதிக்குள் நுழைந்து இரண்டு சருகுமான்களை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியுள்ளனர்.
வனப்பகுதியில் வெளிச்சம் தெரிவதைக் கண்ட வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, அங்கிருந்த ராணுவ வீரர் பாக்யராஜ் வனத்துறையினரை தாக்கிவிட்டு, தான் வைத்திருந்த துப்பாக்கியுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவருடன் இருந்த கண்ணனை வனத்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சருகுமானை துப்பாக்கியால் வேட்டையாடிய இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக உள்ள ராணுவ வீரர் பாக்யராஜை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து வேட்டையாடியது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.