by Vignesh Perumal on | 2025-04-27 05:47 PM
சிவகங்கை மாவட்டம், சாமியார்பட்டியில் திமுக பிரமுகர் பிரவீன்குமார் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளராக இருந்த பிரவீன்குமார் (வயது 35), சாமியார்பட்டியில் உள்ள தனது தோட்டத்தில் இருந்தபோது, 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பிரவீன்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
பிரவீன்குமார் கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரவீன்குமாருக்கு தனிப்பட்ட பகை இருந்ததா? அல்லது அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த கொலை சம்பவம் சாமியார்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி திமுக தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.