by Vignesh Perumal on | 2025-04-25 03:25 PM
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு வழக்கு தொடர்பாக, பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜெகநாதன் இன்று சேலம் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் என்ற தனியார் அமைப்பை விதிமுறைகளை மீறித் தொடங்கி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக துணைவேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் தங்கவேலு உள்ளிட்ட நான்கு பேர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, புகார் அளித்தவரை சாதி ரீதியாகத் திட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த முறைகேடு வழக்கு தொடர்பாக விசாரணை தீவிரமடைந்துள்ளது. இன்று காவல் உதவி ஆணையர் முன்பு ஆஜரான துணைவேந்தர் ஜெகநாதனிடம், வழக்கு தொடர்பான பல்வேறு தகவல்களை காவல்துறையினர் கேட்டறிந்தனர். மேலும், அவரது கருத்துக்களை வீடியோ பதிவு செய்தும் கொண்டனர்.
இந்த வழக்கு பெரியார் பல்கலைக்கழக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் புகார்கள் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் முடிவில் உண்மை நிலை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துணைவேந்தர் ஜெகநாதன் ஆஜரானது இந்த வழக்கின் முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.