by Vignesh Perumal on | 2025-04-18 04:03 PM
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் (VAO) மாரியப்பன் (வயது 70) சந்தேக மரணத்தில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
வேடசந்தூர் அருகே புளியமரத்து கோட்டை பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஆவார். இவர் கடந்த 11ஆம் தேதி தனது வீட்டில் இறந்து கிடந்தார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில், வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலாயுதம் தலைமையிலான போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 17) மாரியப்பனின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு மருத்துவக் குழுவினரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக மாரியப்பனின் தோட்டத்தில் வேலை செய்து வந்த 17 வயது சிறுவனை வேடசந்தூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மாரியப்பன் நகைக்காக கொலை செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது. சிறுவன் நகைக்காக மாரியப்பனை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சிறுவன் கொலைக்கான மோட்டிவேஷன் மற்றும் கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் வந்த பின்னரே மாரியப்பனின் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.