by admin on | 2025-01-26 07:33 AM
சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும் ஒரே மாதிரியாக கொடி ஏற்றப்படும் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள். ஆனால் அப்படி செய்வது கிடையாது. சுதந்திர தினத்தன்று, பிரதமர் கொடி ஏற்றுவார். குடியரசு தினத்தன்று, குடியரசுத் தலைவர் கொடியை அவிழ்ப்பார். இரண்டும் ஒரே மாதிரியாக இருந்தாலும், இரண்டு விழாக்களுக்கு முக்கிய வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக இரண்டையுமே ஏற்றுவதாகத் தான் குறிப்பிடுவோம். ஆனால் அது தவறு.
காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட புதிய தேசத்தின் எழுச்சியைக் குறிக்கும் வகையில் சுதந்திர தினத்தன்று தேசிய கொடி, கம்பத்தின் கீழிருந்து ஏற்றப்பட்டது. அதனால் அந்த சுதந்திரம் பெற்ற நாளின் நினைவாக கம்பத்தின் கீழிருந்து கொடி ஏற்றப்படும். மறுபுறம், குடியரசு தினமான ஜனவரி 26 அன்று மூவர்ணக் கொடியை அவிழ்க்கும் போது, கொடி மூடப்பட்டு கம்பத்தின் உச்சியில் கட்டப்பட்டிருக்கும். இந்திய குடியரசுத் தலைவர் மூவர்ணக்கொடியை அவிழ்த்து விடுவார்.
யார் அவிழ்ப்பார், யார் ஏற்றுவார்? ஏன்?
முதல் சுதந்திர தினத்தன்று மவுண்ட்பேட்டன் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தார். புதிதாக சுதந்திரம் பெற்ற தேசத்தின் கொடியை ஏற்றுவதற்கு காலனித்துவ நாட்டின் பிரதிநிதி பொறுப்பேற்க முடியாது. எனவே அந்த பணி இந்திய மக்களின் பிரதிநிதியாக பிரதமர் பதவியில் ஜவாஹர்லால் நேரு இருந்தார். அதனால் அவரே அந்த கொடியை ஏற்றினார். இதனால் தான் சுதந்திர தினத்தன்று இன்றும் நாட்டின் பிரதமர் கொடி ஏற்றுகிறார்.
இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டம் இயற்றப்பட்டு இந்தியா, குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, புதிய குடியரசு தலைவராகப் பொறுப்பேற்ற ராஜேந்திர பிரசாத் கொடியை ஏற்றி வைத்தார். அந்தப் பழக்கமே இன்றும் தொடர்கிறது. அதேபோல் மாநிலங்களில் சுதந்திர தினத்தன்று முதலமைச்சரும் குடியரசு தினத்தன்று கவர்னரும் கொடியேற்றுவார்கள். இந்த நடைமுறை 1974ஆம் ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வந்தது.
இடம்:
இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையிலான மற்றொரு வித்தியாசம் இடம். சுதந்திரம் பெற்று முதலில் முன்னாள் பிரதமர் நேரு, செங்கோட்டையில் இருந்து மூவர்ணக் கொடியை ஏற்றியதால் இன்றும் அதுவே தொடர்கிறது.
மறுபுறம், குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவர் ராஜ்பாத்தில் கொடியேற்றுகிறார். அதாவது குடியரசின் உயரிய முடிவுகள் எடுக்கப்படும் குடியரசு தலைவர் இருப்பிடம். அதைத் தொடர்ந்து இராணுவ வலிமை மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை அடங்கிய நிகழ்ச்சி, நாட்டின் வளத்தை உலகிற்குக் காட்டுவதற்காக நடைபெறும்.