by Vignesh Perumal on | 2026-07-05 06:55 PM
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபல ரவுடி சுத்தமல்லி சுந்தர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது கூட்டாளிகள் 6 பேர் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுத்தமல்லி சுந்தர் (34) என்பவர் மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட 23-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் தமிழக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த ஒரு முக்கிய குற்றவாளி ஆவார்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் சுந்தர் வந்த வாகனம் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. விபத்தையடுத்து அங்கு திரண்ட பொதுமக்களிடம், சுந்தர் மற்றும் அவரது தரப்பினர் கத்தியைக் காட்டி மிரட்டி, தப்பியோட முயன்றனர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ரவுடி சுத்தமல்லி சுந்தரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். அவரிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தச் சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (S.P.) ஜெயக்குமார் உத்தரவின் பேரில், வேடசந்தூர் துணைக்காவல் கண்காணிப்பாளர் (DSP) பவித்ரா மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கணேசமூர்த்தி தலைமையிலான போலீசார், கைது செய்யப்பட்ட சுந்தரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், நெல்லையைச் சேர்ந்த இந்த பிரபல ரவுடிக்கு வேடசந்தூர் உள்ளூர் நபர்கள் சிலர் புகலிடம் கொடுத்து, சட்டவிரோத செயல்களுக்குத் துணையாக இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது.
ரவுடி சுந்தருக்கு உதவியாகவும், அவருடன் இணைந்து குற்றச் செயல்களில் ஈடுபட முயன்றதாகவும் வேடசந்தூரைச் சேர்ந்த 6 கூட்டாளிகளை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். குறிப்பாக கார்த்தி (எ) சேட்டை கார்த்தி (36), சிவந்தர் (எ) பப்லு (20), ராஜ்குமார் (25), சரத் (33), தங்கபரமேஸ் (41), கார்த்திகேயன் (45) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இந்த 6 பேரிடமிருந்தும் தாக்குதலுக்குப் பயன்படுத்தத் தயாராக வைக்கப்பட்டிருந்த வாள்கள் மற்றும் பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல்வேறு கோணங்களில் வேடசந்தூர் போலீசார் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த அதிரடி கைது நடவடிக்கை வேடசந்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்
பிரபல ரவுடிகள் 6 பேர் அதிரடி கைது...! திக் திக் நிமிடங்கள்...!
கன்டெய்னரில் கடத்தல்...! ஒரு டன் பறிமுதல்...! டிரைவர் கைது...!
சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை - பிரியாணி கடை அதிபர் போக்சோவில் கைது !
போதைப் பொருளை கண்டுபிடிக்க பயிற்சி முடித்த ராணா மோப்பநாய்.....!!!!
3 வருடங்களுக்கு மேல் "ஒரே பணி - அதே இடம் " ..? இடம் மாற்றம் செய்து கலெக்டர் அதிரடி !!