by Vignesh Perumal on | 2025-07-05 05:36 PM
செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி அருகே சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள யானைத் தந்தத்தைப் பறிமுதல் செய்த வனத்துறை அதிகாரிகள், இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 8 பேரைக் கைது செய்தனர்.
பரனூர் வழியாக யானைத் தந்தம் கடத்தி வரப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், வனத்துறை அதிகாரிகள் பரனூர் சுங்கச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமான ஒரு கார் சுங்கச்சாவடி நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்தக் காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தபோது, காருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெரும் மதிப்புள்ள யானைத் தந்தம் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக, அதிகாரிகள் யானைத் தந்தத்தைப் பறிமுதல் செய்தனர்.
யானைத் தந்தத்தைக் கடத்தி வந்த ஒரு பெண் உட்பட 8 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையில், கைதான 8 பேரும் பெங்களூரு மற்றும் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இந்த யானைத் தந்தம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, இந்தக் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் உள்ள பெரிய கும்பல் எது, சர்வதேச கடத்தல்காரர்களுடன் இவர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்து வனத்துறை அதிகாரிகளும், போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-ன் கீழ், யானைத் தந்தத்தைக் கடத்துவது கடுமையான குற்றமாகும். இந்தக் கடத்தல் சம்பவம், வனவிலங்கு கடத்தல் கும்பல்களின் பிடியில் இந்தியா சிக்கியுள்ளதை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.