by Vignesh Perumal on | 2025-07-04 04:18 PM
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே நரி மற்றும் கீரிப்பிள்ளைகளை வேட்டையாடி சமைத்துக் கொண்டிருந்த நான்கு பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
வனத்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், இரண்டு தனித்தனி சம்பவங்களில் வேட்டையாடப்பட்ட விலங்குகளுடன் நபர்கள் பிடிபட்டனர்.
கோவிலூரை அடுத்த R.கோம்பை பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கோட்டாநத்தத்தைச் சேர்ந்த சுரேஷ் (46) மற்றும் முத்துசாமி (55) ஆகியோர் கீரிப்பிள்ளையை வேட்டையாடி சமைத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வனத்துறையினர் உடனடியாக இருவரையும் கைது செய்தனர்.
அதேபோல, குஜிலியம்பாறை C.C. குவாரி பகுதியில் வனத்துறையினர் மேற்கொண்ட சோதனையில், பழனி, பெத்தநாயக்கனூரைச் சேர்ந்த பாபு (52) மற்றும் காளிதாஸ் (45) ஆகியோர் நரியை வேட்டையாடி சமைத்துக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
நரி மற்றும் கீரிப்பிள்ளை ஆகிய இரண்டும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-ன் கீழ் பாதுகாக்கப்படும் விலங்குகள் ஆகும். அவற்றை வேட்டையாடுவது சட்டப்படி கடுமையான குற்றமாகும். கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் வனத்துறையினர் வேடசந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின் பேரில், அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுபோன்ற வனவிலங்கு வேட்டைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
செய்தி-மோகன் கணேஷ் திண்டுக்கல்.