by Vignesh Perumal on | 2025-07-03 05:10 PM
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல்துறையினரால் தாக்கப்பட்ட சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் முக்கிய ஆதாரமாகச் சமர்ப்பித்த சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள சக்தீஸ்வரன், தனக்கு ரவுடிகளுடன் தொடர்பிலுள்ள காவலர்களிடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதாகவும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறி தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சங்கர் ஜிவாலுக்கு பாதுகாப்பு கோரி கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட டிஜிபி அலுவலகம், சக்தீஸ்வரனுக்கு உடனடி பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது.
அஜித்குமார் கொலை வழக்கில், காவல்துறையினர் அஜித்குமாரை பிளாஸ்டிக் பைப்பால் தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோவை சக்தீஸ்வரன் தான் தனது செல்போனில் பதிவு செய்தார். இந்த வீடியோ, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமர்ப்பிக்கப்பட்டு, நீதிபதிகள் முன்னிலையில் திரையிடப்பட்டது. இந்த ஆதாரம், அஜித்குமாரின் மரணம் கொலை என்பதை உறுதிப்படுத்தவும், சம்பந்தப்பட்ட 5 காவலர்கள் கைது செய்யப்படவும் முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். அஜித்குமார் என்ன தீவிரவாதியா, ஏன் அவரை காவல் நிலையத்திற்கு வெளியே வைத்து விசாரித்தார்கள், உயர் அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என சரமாரி கேள்விகளை எழுப்பினர். இந்தச் சூழலில், முக்கிய சாட்சியான சக்தீஸ்வரனுக்கு அச்சுறுத்தல் இருப்பது வழக்கு விசாரணையின் நம்பகத்தன்மையை பாதிக்கும் என்பதால், அவருக்கு பாதுகாப்பு அளிப்பது அவசியமானதாகக் கருதப்பட்டது.
சக்தீஸ்வரனுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு, வழக்கு விசாரணை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.