by Vignesh Perumal on | 2025-05-12 11:35 AM
திண்டுக்கல் அருகே சத்யாநகர் பகுதியில் கருணாகரன் என்பவருக்கு சொந்தமான புல்லட் மோட்டார் சைக்கிள் திருடு போனது குறித்து தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) பிரதீப் அவர்களின் உத்தரவின் பேரில், புறநகர் துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) சிபி சாய் சௌந்தர்யன் அவர்களின் மேற்பார்வையில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சார்பு ஆய்வாளர்கள் முனியாண்டி மற்றும் சூரியகலா உள்ளிட்ட காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர்.
இந்த தீவிர விசாரணையின் பலனாக, புல்லட் திருட்டில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் திண்டுக்கல் மருதாணி குளம் பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி மகன் வெங்கடாசலபதி (வயது 45) மற்றும் வேடசந்தூர், ஒத்தப்பட்டியைச் சேர்ந்த வேல்முருகன் மகன் நவீன்குமார் (வயது 25) ஆவர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் திருடப்பட்ட இரண்டு புல்லட் மோட்டார் சைக்கிள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட வெங்கடாசலபதி மற்றும் நவீன்குமார் ஆகிய இருவரையும் தாடிக்கொம்பு காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த துரித நடவடிக்கையின் மூலம் புல்லட் திருட்டு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
நிர்வாக ஆசிரியர்-பா.விக்னேஷ்பெருமாள்.