by Vignesh Perumal on | 2025-05-11 12:13 PM
இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் நிறுத்த அறிவிப்பை இரு நாடுகளும் வெளியிடுவதற்கு முன்பே அமெரிக்கா வெளியிட்டது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் அறிவிப்பதற்கு முன்பே, அமெரிக்கா போர் நிறுத்த அறிவிப்பை வெளியிடுகிறது. இரு நாடுகள் பிரச்னையில் 'நடுநிலை' என்ற அமெரிக்க வெளியுறவு செயலாளரின் கருத்து, பல கேள்விகளை எழுப்புகிறது. மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் செய்ய, நாம் கதவுகளை திறந்து விட்டுள்ளோமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், "இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளின் பிரச்னையில் அமெரிக்கா தலையிடுவது என்பது, நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. இது தொடர்பாக விவாதிக்க பிரதமர் மோடி உடனே அனைத்துக் கட்சி கூட்டம் மற்றும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.