by Vignesh Perumal on | 2025-05-10 10:44 AM
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த பள்ளக்குழி அருகே குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் நேற்று (09.05.2025) தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் அனுமதியின்றி கடத்தி வரப்பட்ட 1,750 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, ரேஷன் அரிசியை கடத்தி வந்த சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த ஜெகதீசன் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஜெகதீசன் ரேஷன் அரிசியை எங்கிருந்து கடத்தி வந்தார், எங்கு கொண்டு செல்ல முயன்றார் என்பது குறித்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.