by Vignesh Perumal on | 2025-05-06 07:59 AM
தேனி மாவட்டம் போடி அருகே முந்தல் சாலையில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் தனியார் ஏல விவசாயிகள் சங்க கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. தேனி பாராளுமன்ற உறுப்பினர் திரு. தங்கதமிழ்ச்செல்வன் இந்த பசுமை முயற்சியை தொடங்கி வைத்தார்.
கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டம் (NSS) மற்றும் உத்தம்பாளையம் நன்செய் அறக்கட்டளை ஆகியவை இணைந்து கல்லூரி வளாகத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் பல்லுயிர்களுக்கான வனத்தை உருவாக்கும் நோக்கில் இந்த மரக்கன்று நடும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தலைவர் திரு. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் திரு. புருஷோத்தமன் முன்னிலை வகித்தார். உபதலைவர் திரு. ராமநாதன் அனைவரையும் வரவேற்றார்.
விழாவின் சிறப்பு விருந்தினராக தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், தேனி பாராளுமன்ற உறுப்பினருமான திரு. தங்கதமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு முதல் மரக்கன்றை நட்டு விழாவை முறைப்படி துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர் திரு. சிவப்பிரகாசம், கல்லூரி முதல்வர் முனைவர் சிவக்குமார், நன்செய் அறக்கட்டளை தன்னார்வலர்கள் மற்றும் பிற விருந்தினர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். போடி திமுக நகரச் செயலாளர் திரு. புருஷோத்தமன், போடி நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் திரு. சங்கர், நகர்மன்ற உறுப்பினர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவ மாணவியர்கள் இந்த பசுமை விழாவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
என்சிசி மற்றும் என்எஸ்எஸ் அலுவலர்கள் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். இந்த மரக்கன்று நடும் முயற்சி கல்லூரி வளாகத்தை பசுமையாக்குவதுடன், பல்லுயிர் பெருக்கத்திற்கும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.