by Vignesh Perumal on | 2025-05-06 07:51 AM
தேனி மாவட்டம் குன்னூர் பகுதியில் வைகை ஆற்றில் தேங்கியிருந்த சுகாதாரமற்ற பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் துணிகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுப் பொருட்களை தன்னார்வலர்கள் இணைந்து அகற்றினர்.
பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் நீர், கொட்டங்குடி ஆற்றின் நீர் மற்றும் வருஷநாடு மூல வைகை ஆற்று நீர் ஆகியவை குன்னூர் பாலம் வழியாக வைகை அணையை வந்தடைகின்றன. இவ்வாறு வரும் நீருடன் சேர்ந்து பிளாஸ்டிக் கழிவுகள், தண்ணீர் பாட்டில்கள், துணிகள், பாலிதீன் பைகள் போன்ற சுகாதாரமற்ற பொருட்கள் குன்னூர் பாலம் அருகே அதிக அளவில் தேங்கி ஆறு மாசு அடைந்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, தேனி மாவட்ட நல்லோர் வட்டக் குழுவின் மாவட்ட பொறுப்பாளர் குறிஞ்சி மணி மற்றும் எம்.சுப்புலாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ரஞ்சித் குமார் ஆகியோர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் என்.எஸ்.எஸ். மாணவர்கள் இணைந்து ஆற்றில் கிடந்த சுகாதாரமற்ற பொருட்களை அகற்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
தூய்மைப் பணியில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "தினந்தோறும் சாக்கடை கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் முல்லைப் பெரியாறு, மூல வைகை ஆறு, கொட்டங்குடியாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் வந்து சேர்கின்றன. குறிப்பாக, ஆண்டுதோறும் வீரபாண்டி கோயில் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் பாலிதீன் பொருட்கள் மற்றும் துணிகளை ஆற்றில் போடுவதை தவிர்க்க வேண்டும். மேலும், குன்னூர் ஆற்றுப் பாலத்தில் இருந்து பலரும் தொடர்ந்து கழிவுப் பொருட்களை ஆற்றில் கொட்டுவதால் வைகை ஆறு மாசடைகிறது. இதனை நீர்வள ஆதாரத் துறையினரும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.
தன்னார்வலர்களின் இந்த முயற்சிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர். வைகை ஆற்றை பாதுகாப்பதன் அவசியத்தையும், கழிவுகளை ஆற்றில் கொட்டுவதை தவிர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.
கிணற்றைத் தூர் வாரி பெண் கவுன்சிலர் அதிரடி ! குவியும் பாராட்டுகள் !!
மே 5 முதல் PG மற்றும் விடுதி கட்டணங்கள் உயர்வு...! அதிரடி அறிவிப்பு...!
மதுரை - நத்தம் மேம்பாலத்தில் பயங்கரம்...! நேருக்கு நேர் மோதி...! 3 பேர் பலி...!
சட்டவிரோத மது விற்பனை...! இருவர் கைது...! 52 மதுபாட்டில்கள் பறிமுதல்..!
பழனி அருகே பயங்கரம்...! ஆந்திராவைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட இருவர் பலி..!