by Vignesh Perumal on | 2025-05-03 03:04 PM
மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் செயல்படுத்தப்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காக கடலுக்கு அடியில் பதிக்கப்பட்ட 1500 மீட்டர் நீள ராட்சத குழாய் கரை ஒதுங்கியுள்ளது. கடந்த மூன்று நாட்களாக இந்த குழாயை மீண்டும் கடலுக்குள் நகர்த்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நெம்மேலியில் அமைக்கப்பட்டு வரும் இந்த குடிநீர் திட்டத்திற்காக, கடற்கரையிலிருந்து சுமார் 1500 மீட்டர் தூரம் கடலுக்குள் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், எதிர்பாராத விதமாக ஒரு ராட்சத குழாய் அலையின் வேகத்தால் இழுத்து வரப்பட்டு கரை ஒதுங்கியது. இந்த குழாய் மணலில் சுமார் 2 அடி ஆழத்திற்கு புதைந்துள்ளதால், அதனை உடனடியாக நகர்த்துவது சவாலாக உள்ளது.
கடந்த மூன்று நாட்களாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள், பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் குழாயை நகர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மணலை தோண்டி அகற்றி, படிப்படியாக குழாயை நகர்த்தி மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்லும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக குழாய் தனது நிலையிலிருந்து விலகி வந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் காரணமாக நெம்மேலி குடிநீர் திட்டப்பணிகளில் சிறு காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனினும், கரை ஒதுங்கிய குழாயை விரைவாக மீட்டு, திட்டத்தை குறித்த நேரத்தில் முடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ராட்சத குழாயை நகர்த்தும் பணியை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.
தலைமை செய்தியாளர்-பா.விக்னேஷ்பெருமாள்.