| | | | | | | | | | | | | | | | | | |
மாவட்டம் Dindigul

திடீர் பரபரப்பு...! தவெக, திமுக கடும் மோதல்....! போலீஸ் தீவிர விசாரணை...!

by Vignesh Perumal on | 2026-06-06 06:30 PM

Share:


திடீர் பரபரப்பு...! தவெக, திமுக கடும் மோதல்....! போலீஸ் தீவிர விசாரணை...!

திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கணேஷ் தியேட்டர் சுவரில் போஸ்டர் ஒட்டுவது தொடர்பாக, ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தொண்டர்களிடையே கடுமையான வாக்குவாதமும் மோதல் சூழலும் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் திண்டுக்கல் நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் நகரில் முக்கியப் பிரமுகர்களின் போஸ்டர்கள் மற்றும் சினிமா போஸ்டர்கள் ஒட்டப்படும் பிரதான இடமாக விளங்கும் கணேஷ் தியேட்டர் காம்பவுண்ட் சுவரில், இன்று காலை தவெக மற்றும் திமுகவினர் போஸ்டர் ஒட்ட வந்துள்ளனர்.

ஏற்கனவே ஒட்டப்பட்டிருந்த போஸ்டரின் மீது மற்றொரு தரப்பினர் போஸ்டரை ஒட்ட முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பு நிர்வாகிகளுக்கும் இடையே லேசான வாக்குவாதம் தொடங்கி, பின்னர் அது தள்ளுமுள்ளாக மாறியது. இரண்டு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களும் அந்த இடத்தில் பெருமளவில் குவியத் தொடங்கியதால், அப்பகுதியில் கடுமையான பதற்றமும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மோதல் போக்கில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கலைந்து போகச் செய்தனர். பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் பொதுச் சுவர்களில் போஸ்டர் ஒட்டுவது மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தியது குறித்து காவல் அதிகாரிகள் அங்கிருந்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக அரசு அமைந்துள்ள சூழலில், திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில காலங்களாகவே திமுக மற்றும் தவெக தொண்டர்களிடையே போஸ்டர் மூலமாக மறைமுக அரசியல் யுத்தம் நடந்து வருகிறது. தற்போது அது பொது இடத்தில் நேரடியாக மோதும் நிலைக்குச் சென்றுள்ளது திண்டுக்கல் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம், கணேஷ் தியேட்டர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கியப் பகுதிகளில் நகர் வடக்கு போலீசார் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.







நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள்

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment