by Vignesh Perumal on | 2025-09-30 06:40 PM
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய் கலந்துகொண்ட பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக, சி.சி.டி.வி. காட்சிகள் உள்ளிட்ட ஆவணங்களைப் பாதுகாக்கக் கோரி த.வெ.க. நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கில், கரூர் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் சரமாரியான கேள்விகளை எழுப்பியதுடன், "எந்த ஆவணத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது; மனசாட்சிப்படி உத்தரவு பிறப்பிப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, நீதிபதி பரத்குமார் த.வெ.க. மற்றும் காவல்துறை தரப்பிடம் பின்வரும் முக்கியக் கேள்விகளை எழுப்பினார்:
"டாப் ஸ்டாரான விஜயைப் பார்க்க 10,000 பேர் மட்டுமே வருவார்கள் என எப்படி கணித்தீர்கள்? முதலமைச்சர் மற்றும் மற்றக் கட்சித் தலைவர்களுடன் விஜய்யை ஒப்பிடக் கூடாது. விஜய்யைப் பார்க்கக் குழந்தைகள் கண்டிப்பாக வருவார்கள். அதிக கூட்டம் வரும் என்பது தெரிந்தும், அதற்குத் தகுந்த இடத்தை ஏன் கேட்கவில்லை? நீங்கள் கேட்ட மூன்று இடங்களுமே கூட்டத்திற்குப் போதுமானது அல்ல."
"3 மணிக்கு விஜய் வந்திருந்தால் கூட்ட நெரிசல் ஏதும் நடந்திருக்காது என்று டி.எஸ்.பி. தெரிவிக்கிறார். தாமதம் குறித்து நிர்வாகிகள் யாரும் தகவலை உங்கள் தலைவருக்குச் சொல்லவில்லையா?"
"கூட்டம் அளவை கடந்து சென்றது என்று தெரிந்தும் நிர்வாகிகள் ஏன் பரப்புரையை நிறுத்தவில்லை? அசாதாரண சூழல் இருந்தால் பரப்புரையை நிறுத்தலாம் என்று நிபந்தனை இருந்தும், காவலர்கள் ஏன் அதைக் கடைப்பிடிக்கவில்லை?"
"அவரவர் உயிரைக் காப்பாற்ற அவரவர் ஓடுகிறார்கள்; தவறு யார் மீது உள்ளது என்பதைச் சொல்லுங்கள்."
"காலாண்டுத் தேர்வு விடுமுறை, வார விடுமுறை உள்ள நிலையில் ஏன் மக்கள் குறைத்து வருவார்கள் எனத் த.வெ.க. கணக்கிட்டது?"
காவல்துறை தரப்பு (டி.எஸ்.பி. செல்வராஜ்) விஜய் 12.45-க்கு வருவார் என அறிவிக்கப்பட்டாலும், அவர் 5 மணி நேரம் தாமதமாக வந்தார். "பரப்புரை வாகனம் குறிப்பிட்ட இடத்தை வந்தவுடன் போதும் என்றேன்; ஆனால் ஆதவ் அர்ஜூனாதான் இன்னும் முன்னே செல்வோம் என்றார்."
முனுசாமி கோயில் பகுதியில் ஆனந்த் வாகனத்தை நிறுத்தி தாமதம் செய்தபோது, விஜய் கேரவனுக்குள் சென்றுவிட்டார். அங்கேயே விஜய்யைப் பார்த்திருந்தால் கூட்டம் கலைந்து சென்றிருக்கும். விஜய்யின் பரப்புரை வாகனம் முன்னே சென்றபோதுதான் கூட்ட நெரிசல் தீவிரமடைந்தது. ரயில்வே பாலம் உள்ளதால் கரூர் லைட் ஹவுஸ் பகுதியில் பரப்புரைக்கு அனுமதி தரவில்லை.
"கட்சிக்காரர்களை நாங்கள் தடுக்கலாம், ஆனால் பொதுமக்களைத் தடுக்க வேண்டியது காவல்துறைதான்."
அதிக கூட்டம் வரும் என்பது தெரிந்தும் காவலர்கள் அதைக் கட்டுப்படுத்தவில்லை. பரப்புரை இடத்தில் இருந்த சாக்கடைக் குழி, வெறும் அட்டை வைத்தே அடைத்து வைக்கப்பட்டிருந்தது. கூட்ட நெரிசலுக்குப் பின்னால் அரசியல் சூழ்ச்சி உள்ளது. கூட்டத்திற்கு வந்தது த.வெ.க.வினர் இல்லை; சாதாரண மக்கள். கூட்டத்திற்குக் கழகத்தினர் வண்டி வைத்து அழைத்து வரவில்லை; மக்கள் தானாக வந்த கூட்டம். ஒரு நபர் ஆணைய அறிக்கை வரும் வரையில் யாரையும் கைது செய்யக் கூடாது.
கூட்ட நெரிசல் ஏற்பட்ட கரூரில் போலீஸ் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியது. 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய வேண்டும். கைது செய்யப்பட்ட த.வெ.க.வின் இரு மாவட்டச் செயலாளர்கள் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீண்ட வாதங்களுக்குப் பிறகு, நீதிபதி பரத்குமார், "எந்த ஆவணத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது; மனசாட்சிப்படி உத்தரவு பிறப்பிப்பேன்" என்று கூறி, வழக்கை முடித்து வைப்பதாகத் தெரிவித்தார். விபத்துக்கான முழுப் பொறுப்பு யாருடையது என்ற கேள்வி இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
ஆசிரியர்கள் குழு.....