by Vignesh Perumal on | 2025-08-05 02:02 PM
வத்தலகுண்டு அருகே கோவில் திருவிழாவில் சூடான ரசப் பாத்திரத்தில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே உள்ள எழுவனம்பட்டியில் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது, நந்தகோபால் என்பவரின் மகன் ஸ்ரீதரன் (2), சமையல் நடந்த இடத்திற்கு அருகே விளையாடிக்கொண்டிருந்தான்.
அப்போது, அங்கிருந்த சூடான ரசம் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தின் மீது ஏற முயன்றபோது, பாத்திரத்தின் மூடி நழுவி, எதிர்பாராதவிதமாக குழந்தை ரசத்தில் விழுந்தது. இதில் ஸ்ரீதரனுக்கு கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டன.
உறவினர்கள் உடனடியாகக் குழந்தையை மீட்டு, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், ஸ்ரீதரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
இந்தச் சம்பவம் குறித்து வத்தலகுண்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவின் மகிழ்ச்சியான சூழலில் நடந்த இந்த துயரச் சம்பவம், அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.