| | | | | | | | | | | | | | | | | | |
அரசியல் அரசியல்

அதிமுகவிற்கு அதிர்ச்சி...! அதிருப்தியில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.தமிழரசன்...! திமுகவில் ஐக்கியம்..!

by Vignesh Perumal on | 2026-04-01 09:48 PM

Share:


அதிமுகவிற்கு அதிர்ச்சி...! அதிருப்தியில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.தமிழரசன்...! திமுகவில் ஐக்கியம்..!

மதுரை மாவட்ட அதிமுக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. தமிழரசன் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். 

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல்கள் வெளியாகி வரும் நிலையில், தென் மாவட்ட அதிமுகவில் முக்கிய நிர்வாகியாக இருந்த கே. தமிழரசன், முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.

மதுரை கிழக்கு மாவட்ட ஜெ. பேரவைச் செயலாளராகப் பொறுப்பு வகித்த கே. தமிழரசன், வரும் தேர்தலில் மேலூர் தொகுதியில் போட்டியிட அதிமுக தலைமையிடம் வாய்ப்புக் கேட்டிருந்தார். இதற்காகச் சென்னையில் முகாமிட்டு, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார் மற்றும் வி.வி. ராஜன் செல்லப்பா ஆகியோரின் ஆதரவைப் பெற முயற்சித்தார்.

இருப்பினும், அதிமுக தலைமை மேலூர் தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ-வாக உள்ள பெரியபுள்ளானுக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கியது. இதனால் கடும் அதிருப்தியடைந்த தமிழரசன், சொந்த ஊரான மதுரைக்குத் திரும்பாமலேயே சென்னையில் தங்கி அதிரடி முடிவெடுத்தார்.

சென்னையில் இருந்தபடியே திமுக அமைச்சரும், மதுரை கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான பி. மூர்த்தியைத் தொடர்பு கொண்ட தமிழரசன், தனது விருப்பத்தைத் தெரிவித்தார். அமைச்சர் மூர்த்தி கட்சித் தலைமையிடம் ஆலோசித்ததைத் தொடர்ந்து, இன்று காலை முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்துத் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். இவருடன் இவரது தம்பி பொன்னுசாமியும் திமுகவில் இணைந்தார்.

கே. தமிழரசன் சாதாரணமானவர் அல்ல; அவர் கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில், மதுரை கிழக்குத் தொகுதியில் தற்போது அமைச்சராக இருக்கும் பி. மூர்த்தியையே தோற்கடித்து எம்.எல்.ஏ-வானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழரசன் திமுகவில் சேர்ந்தது குறித்து மதுரை அதிமுகவினர் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.

கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், மேற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.பி. உதயகுமாரின் தீவிர ஆதரவாளராகவே அவர் செயல்பட்டார். இது கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பாவுக்கும் அவருக்கும் இடையே நீண்ட கால மோதலை உருவாக்கியது.

"கிழக்குத் தொகுதியில் பி. மூர்த்தியை எதிர்த்துப் போட்டியிடுங்கள்" எனத் தலைமை கூறியபோது, அதை மறுத்துவிட்டு மேலூர் தொகுதியை மட்டுமே அவர் கேட்டார். ஆனால், ஏற்கெனவே எம்.எல்.ஏ-வாக இருப்பவரை மாற்றத் தலைமை விரும்பவில்லை.





 






நிர்வாக ஆசிரியர் - பா.விக்னேஷ்பெருமாள் 

WhatsApp Group Join Now

Recent News

Search
Ads

Leave a Comment