by Vignesh Perumal on | 2025-09-04 03:58 PM
விவாகரத்து பெறும் மனைவிக்கு அதிக வருமானம் மற்றும் சொத்துகள் இருக்கும்பட்சத்தில், கணவர் அவருக்கு ஜீவனாம்சம் வழங்கத் தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. சென்னையைச் சேர்ந்த டாக்டர் தம்பதி வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஒரு டாக்டர் தம்பதிக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. சில கருத்து வேறுபாடுகள் காரணமாக, இருவரும் பிரிந்து வாழ முடிவெடுத்தனர். இதைத் தொடர்ந்து, மனைவி விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், கணவரிடம் இருந்து மாதந்தோறும் ரூ.50,000 ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த குடும்பநல நீதிமன்றம், கணவர் மாதந்தோறும் ரூ.20,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து கணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம், சில அம்சங்களைக் கவனத்தில் கொண்டு தீர்ப்பை வழங்கினார். அதாவது, மனைவிக்குச் சொந்தமாக ஒரு மருத்துவமனை உள்ளது. மாதந்தோறும் ₹2 லட்சம் வரை வருமானம் ஈட்டி வருகிறார். நான்கு பங்களா வீடுகள், ₹50 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்துகளுக்கு அவர் உரிமையாளராக உள்ளார்.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில், நீதிபதி தனது தீர்ப்பில், "விவாகரத்து பெறும் மனைவிக்குச் சொத்துகளும், அதிக வருமானமும் இருக்கும்போது, கணவர் ஜீவனாம்சம் வழங்கத் தேவையில்லை," என்று தெரிவித்தார். மேலும், கணவர் தனது மனைவியின் மருத்துவமனைக்கு முன்பாகச் சென்று போராட்டம் நடத்தக்கூடாது எனவும், அவ்வாறு செய்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள நேரிடும் எனவும் நீதிபதி எச்சரித்தார்.
இந்தத் தீர்ப்பு, விவாகரத்து தொடர்பான வழக்குகளில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாகக் கருதப்படுகிறது.
ஆசிரியர் - தி. முத்துக்காமாட்சி