by Vignesh Perumal on | 2025-09-03 12:58 PM
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே கார் மோதியதில் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள புலிமான்கோம்பை கிராமத்தைச் சேர்ந்த மலையரசன் (50) மற்றும் பூவேந்திரன் (70) ஆகிய இருவரும் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் (செப்டம்பர் 1) இரு சக்கர வாகனத்தில் கரும்பு வெட்டும் பணிக்காக பரமக்குடி அருகே உள்ள எமனேஸ்வரம் கிராமத்திற்கு சென்றுள்ளனர்.
மாலை சுமார் 5 மணியளவில் பரமக்குடி நான்கு வழிச்சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, மதுரையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி அதிவேகமாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அவர்கள் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த மலையரசன் மற்றும் பூவேந்திரன் ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பரமக்குடி நகர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநரான மதுரையைச் சேர்ந்த சுரேஷ்குமார் (30) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர்கள் குழு.....