by Vignesh Perumal on | 2025-06-14 11:47 AM
தமிழ் சினிமாவில் நடிகையாகவும், தலைசிறந்த நாட்டுப்புறப் பாடகியாகவும் திகழ்ந்த கலைமாமணி கொல்லங்குடி கருப்பாயி அம்மாள், இன்று (ஜூன் 14, 2025) காலை 8 மணியளவில் தனது 99-வது வயதில் காலமானார். மதுரை-தொண்டி சாலையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்த இவரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டுப்புறப் பாடல்களில் தன்னிகரில்லாத திறமை கொண்ட கொல்லங்குடி கருப்பாயி, கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மண்ணிசைப் பாடல்களைப் பாடி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவரது திறமையைக் கண்ட நடிகர் மற்றும் இயக்குனர் பாண்டியராஜன், தனது 'ஆண் பாவம்' திரைப்படத்தின் மூலம் இவரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். அப்படத்தில் நடிகர் விகே ராமசாமிக்கு அம்மாவாகவும், பாண்டியராஜனுக்கு பாட்டியாகவும் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
'ஆண் பாவம்' படத்தைத் தொடர்ந்து, 'கோபாலா கோபாலா', 'ஆயிசு நூறு' போன்ற பல திரைப்படங்களிலும் நடித்து தனது முத்திரையைப் பதித்தார். கலைத்துறையில் இவர் ஆற்றிய பெரும் பங்களிப்பைப் பாராட்டி, கடந்த 1993 ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தார்.
கலைமாமணி கொல்லங்குடி கருப்பாயி அம்மாளின் இறுதிச் சடங்குகள் நாளை (ஜூன் 15, 2025) மதியம் அவரது கொல்லங்குடி இல்லத்தில் இருந்து நடைபெற்று நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் நாட்டுப்புற கலைக்கு கருப்பாயி அம்மாள் ஆற்றிய சேவை என்றும் நினைவுகூரப்படும்.
நிர்வாக ஆசிரியர்- பா.விக்னேஷ்பெருமாள்.